search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் ஆத்திரம்"

    பளுகல் அருகே தகராறில் விவசாயியை அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    குழித்துறை:

    களியக்காவிளை அருகே பளுகல் இடைக்கோடு காஞ்சிரதட்டு விளையை சேர்ந்தவர் சுபின் (வயது 31). கட்டிட தொழிலாளி.

    இவரது வீட்டின் முன்பு நின்ற சந்தன மரம் ஒன்றை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருட்டுபோனது. இது தொடர்பாக சுபின் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் செல்வதாசுடன் தகராறில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி செல்வதாஸ் தனது மாடு ஒன்றை அந்த பகுதியில் கட்டி இருந்தார். அதை சுபின் பிடித்துக்கொண்டு தனது வீட்டின் அருகே கட்டினார்.

    இதை தட்டி கேட்பதற்காக செல்வதாஸ் அங்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சுபின் உறவினர் செல்வதாசை கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த செல்வதாஸ் பலத்த காயம் அடைந்தார்.

    அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செல்வதாஸ் தாக்கப்பட்டது குறித்து பளுகல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சுபின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த சுபின் தலைமறைவாகி விட்டார்.

    இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த செல்வதாஸ் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வதாஸ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    செல்வதாஸ் பலியானதை அடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. பலியான செல்வதாசின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

    களக்காடு அருகே காதலிக்க மறுத்த மாணவியை வாலிபர் அரிவாளால் வெட்டிய சம்பவம் ஏர்வாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள ஏர்வாடியை அடுத்த ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகள் பிரியா (வயது20). இவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வங்கி தேர்வுக்காக நெல்லையில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். குமார் இறந்து விட்டார்.

    இதனால் பிரியா அவரது தாய் மாலதி பராமரிப்பில் இருந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இசக்கியப்பன் மகன் இசக்கிமுத்து (21), கூலித்தொழிலாளி. இவர் பிரியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். இவரது காதலை பிரியா ஏற்க மறுத்தார். கடந்த ஜனவரி மாதம் இசக்கி முத்து காதலிக்க மறுத்த பிரியாவை சரமாரியாக தாக்கினார்.

    இது தொடர்பாக ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இசக்கிமுத்து தலைமறைவானார். பின்னர் அவர் சென்னையில் ஒரு பிளக்ஸ் போர்டு கம்பெனியில் வேலை செய்து வந்தார். சமீபத்தில் தசரா திருவிழாவிற்காக இசக்கிமுத்து ஊருக்கு வந்தார். அதன் பிறகு அவர் சென்னை செல்ல வில்லை.

    இந்த நிலையில் பிரியாவை மீண்டும் தன்னை காதலிக்குமாறு இசக்கிமுத்து வலியுறுத்தினார். தொடர்ந்து இசக்கி முத்துவின் காதலை பிரியா ஏற்க மறுத்தார். இதனால் இசக்கிமுத்து ஆத்திரமடைந்தார். இன்று அதிகாலை பிரியாவின் தாய் மாலதி பால் கறப்பதற்காக வெளியில் சென்றார். பிரியா வீட்டில் படுத்திருந்தார்.

    அப்போது இசக்கி முத்து அரிவாளுடன் பிரியாவின் வீட்டிற்குள் நுழைந்தார். அங்கு தூங்கி கொண்டிருந்த பிரியாவை சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதை பார்த்த பிரியாவின் தம்பி இசக்கி (17) தடுத்தார். இதில் இசக்கிக்கும் சரமாரி வெட்டு விழுந்தது. பிரியா, இசக்கி ஆகிய இருவரும் பலத்த வெட்டு காயங்களுடன் அலறினார்கள். உடனே இசக்கி முத்து அங்கிருந்து ஓடி விட்டார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டு பிரியாவையும், இசக்கியையும் சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிமுத்துவை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் களக்காடு, ஏர்வாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    ×